சென்னை: இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் இயக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறும்போது, இந்தியாவில் முதல் முறையாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஓசூர்-கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டச் செலவை இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.