புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமையன்று டெல்லி ஆசாத்பூர் சந்தைக்குச் சென்று காய்கறி வணிகர்களுடன் உரையாடினார்.
அது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் ராகுல் காந்தி சந்தையில் காய்கறிகளின் விலையை வணிகர்களிடம் கேட்டறிவது பதிவாகியுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்கப் பேசிய காய்கறி வணிகர் ஒருவரின் காணொளியைப் பகிர்ந்தார்.
அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி வணிகர், “தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்னால் தக்காளி வாங்கி விற்பனை செய்ய முடியவில்லை. அப்படியே வாங்கினாலும் அதை என்ன விலையில் விற்பது என்பதும் தெரியவில்லை. சிலர் தக்காளிகளை இருப்பு வைத்துள்ளனர். மழையில் அவை அழுகிப்போக வாய்ப்புள்ளது.
“அதனாலும் இழப்பு ஏற்படும். பணவீக்க உயர்வால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு ரூ.200 சம்பாதிப்பதே கடினமாக இருக்கிறது,” என்று கண்ணீர் மல்கப் பேசியிருந்தது பதிவாகியிருந்தது.
கடந்த மே மாதம் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சண்டிகர்வரை லாரியில் பயணம் செய்தார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது.