மும்பை: வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் பாசுமதி சாராத உயர்ரக வெள்ளை அரிசியை விரும்புகிறார்கள்.
ஆகையால், அந்த வகை அரிசியை 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் என்ற முன்னணி வர்த்தக அமைப்பு இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பாசுமதி சாராத வெள்ளை ரக அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.
அதன் காரணமாக அந்த அரிசி போதிய அளவுக்குக் கிடைக்காமல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் சங்கடமான நிலையை ஏதிர்நோக்குகிறார்கள். இந்தியா உலகில் அரிசியை ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு.
இந்தியாவில் விளைச்சல் குறைந்ததை அடுத்து அரிசி விலை 3% கூடியது. அதைத் தொடர்ந்து தனக்கு மிஞ்சிதான் ஏற்றுமதி என்று இந்தியா தடை விதித்தது.
இந்தியா தடை விதித்ததை அடுத்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அரிசி கிடைக்காமல் போய்விடக்கூடும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகம் அரிசியை வாங்க முயன்றதால் பிரச்சினை ஏற்பட்டது. சில கடைகள் வரம்பு விதித்து அரிசி விற்பனையைக் கட்டுப்படுத்தின.
தென்னிந்தியாவில் அதிகம் விளைகின்ற, வெளிநாடுகளில் வசிக்கும் தென்னிந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சோனா மசூரி ரக அரிசியின் ஆதார விலையை ஒரு மெட்ரிக் டன்னுக்கு US1.000 (S$1,300) என்று அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்.
ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அந்த அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.