சித்ரதுர்கா: இந்தியாவின் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் மாசடைந்த நீரை அருந்தியதால் இருவர் மாண்டுபோயினர்.
மேலும் 36 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
காவடிகரகட்டியைச் சேர்ந்த மஞ்சுளா, 23, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்னொருவரான ரகு, 27, மாசடைந்த நீரை அருந்தியபின் பெங்களூரு சென்றபின் உடல்நிலை மோசமடைந்து, பின்னர் மாண்டுபோனார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி விநியோகம் செய்த நீரை அருந்த வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்நீரை அருந்திய சிலர் கடும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ள நோயாளிகள் அருகிலுள்ள தாவனகரே நகர மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் காவடிகரகட்டியில் முகாமிட்டுள்ளனர்.
நீர் மாசடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவ்வூர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நீரும் அவர்களின் கழிவுகளும் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.