புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அதிபர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சிக் கூட்டணி (இண்டியா) எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன், கனிமொழி, டெரிக் ஓ பிரையன், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் அதிபரைச் சந்தித்தனர்.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் 21 எம்.பி.க்கள் குழு, கடந்த வாரம் மணிப்பூருக்குப் பயணம் மேற்கொண்டு நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினர்.
மணிப்பூர் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் மணிப்பூர் சென்று பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.
அதிபரிடம் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள், மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசத் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர். குறிப்பாக, விதி எண் 267இன்படி விவாதம் நடத்தத் தயங்குவது ஏன் என்று அவர்கள் கேட்டனர்.