பெங்களூரு: கர்நாடகாவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை 10 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் கர்நாடகப் பால் கூட்டமைப்பு சார்பில் விற்பனை செய்யப்படும் ‘நந்தினி’ பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடைகளில் டீ, காப்பி, பால் உள்ளிட்டவற்றின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
நெய், தயிர் விலையும் கூடியுள்ளது.
வாகனங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரி 9% முதல் 15% வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000, மகளிருக்குப் பேருந்தில் இலவசம், மாதந்தோறும் 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 ஆகிய ஐந்து இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
இதனால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அரசு திண்டாடி வருவதாகச் சொல்லப்படுகிறது.