குருகிராம்: ஹரியானாவில் திங்கட்கிழமை மூண்ட கலவரத்தாலும் வன்முறைச் சம்பவத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் இதுவரை 116 பேரைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹரியானாவில் நடந்த வன்முறை தலைநகர் டெல்லியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது.
அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் பல கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட குருகிராமின் சோஹ்னா பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் நூ பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் சில முக்கிய இடங்களின் அருகே சில அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நூ பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை வன்முறைக் கும்பல் ஒன்று குருகிராமிலுள்ள பாட்ஷாபூரில் உள்ள ஓர் உணவகத்துக்குத் தீ வைத்தது.
மேலும், அதற்கு அருகிலிருந்த கடைகளையும் அக்கும்பல் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது.