சண்டீகர்: குன்றுகளின் மேலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது, கட்டடங்களின் மேல்மாடிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்கள் நூ வன்முறை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துவதாக ஹரியானா உள்துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் வெள்ளிக்கிழமை அம்பாலாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நூ வன்முறை தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 102 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் தொடர்புடைய யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
“இது திட்டமிடப்பட்டு நடந்த சதி. அனைவரின் கைகளிலும் லத்தி இருந்திருக்கிறது. எங்கிருந்து அவை இலவசமாக வழங்கப்பட்டன? யாரோ சிலர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்திருக்கிறது. எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன. இந்த விஷயத்தின் அடியாழம் வரை நாங்கள் ஆராயப்போகிறோம்,” என்றார்.
குற்றவாளிகளின் சொத்துகள் இடிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு தேவையான இடங்களில் இடிக்கப்படும் நடவடிக்கை பயன்படுத்தப்படும். இடிக்கப்படும் நடவடிக்கை என்பது சிகிச்சையின் ஒரு அங்கம்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இணைய குற்றங்களுக்கான காவல்நிலையம் தாக்கப்பட்டது குறித்து பேசிய அமைச்சர், “இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் தீவிரம் காட்டி வருகிறோம். காவல் நிலையத்தைத் தாக்கியவர்கள் யார், அவர்கள் என்னென்ன ஆவணங்களை அழிக்க முற்பட்டார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவின் இணைய குற்றங்கள் மையமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்படுகிறது. நூ இப்போது புதிய ஜம்தாரா நகராக மாறிவருகிறது.
ஏப்ரல் மாதத்தில், 5,000 காவல்துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் பல மடிக்கணினிகள், ஆயிரக்கணக்கான சிம் மற்றும் ஏடிஎம் அட்டைகள் கைப்பற்றப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது இணைய குற்றங்களுக்கான காவல் நிலையம் தாக்கப்பட்டுள்ளது. இணைய குற்றக் குண்டர்கள் காவல்நிலையத்தை தாக்கி அங்குள்ள கணினிகளைச் சேதப்படுத்தி ஆவணங்களை அழிக்க முயன்றனரா என்ற விசாரணை தொடங்கியுள்ளது.
முன்னதாக, ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தக் கலவரம் குருகிராம் வரை பரவியது.