பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி எண்ணற்ற கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.
அவற்றில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவசப் பொதுப்பேருந்துப் பயணம், குடும்பத்தின் தலைவர்களுக்கு ரூ.2000 நிதியுதவி, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நிதி உதவி, இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகளே அவை.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு அந்த தேர்தல் வாக்குறுதி முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அப்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கியில் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் துணை முதல் அமைச்சர் சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலர் பங்கேற்றனர்.


