மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தக்காளித் திருட்டைத் தடுக்க விவசாயி ஒருவர் தமது விளைநிலத்தில் சிசிடிவி கேமரா அமைத்துள்ள செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் நகர் வலுஜா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரத் ரவெட் தமது விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.
தக்காளி நன்றாக விளைச்சல் தருவதால் அவருக்கு லாபம் கிடைத்து வருகிறது. அதேவேளை விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியை இரவு நேரத்தில் சிலர் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து தக்காளித் திருட்டைத் தடுக்க எண்ணிய விவசாயி சரத் ரவெட், 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தக்காளி பயிரிட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.
அவரைப்போலவே தக்காளி பயிரிட்டுள்ள வேறு பல வியாபாரிகள் இரவு, பகலாகக் கண்காணித்து, தக்காளிப் பழங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
நாட்டில் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. சில நாள்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்கப்பட்டது.