புதுடெல்லி: அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுச் சந்தையில் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி சில்லறை விற்பனைச் சந்தையில் அரிசி விலை 10.63 விழுக்காடும், கோதுமை விலை சில்லறை விற்பனையில் 6.77 விழுக்காடும் உயர்ந்துள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 140 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கையிருப்பில் உள்ள 5 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு ஏலம் மூலம் இந்த விற்பனை நடைபெறும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், அரிசியின் குறைந்தபட்ச விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 31 ரூபாயில் இருந்து 29 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்தை விலை உயர்வு, உணவுப் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய உணவுத் துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் அரிசியின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது.

