காந்திநகர்: இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். மேலும் மனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரதமரின் பட்டம் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்து கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் ஆமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழகப் பதிவாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங்கிற்கு அழைப்பாணை அனுப்ப அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே விசாரித்தார்.
அப்போது அகமதாபாத் இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனு தொடர்பாக பதிலளிக்க குஜராத் பல்கலைக்கழகப் பதிவாளர் பியூஷ் பட்டேலுக்கு உத்தரவிட்டார்.