புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவருடைய கணவர் ராபர்ட் வத்ரா சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார்.
பிரியங்கா காந்தி இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.
அவர் நாடாளுமன்றத்தில் மிக அருமையாகச் செயல்படக்கூடியவர் என்றும் அவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்க திட்டமிடும் என்று தான் நம்புகிறேன் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திரு வத்ரா கூறி இருக்கிறார்.
பிரியங்கா காந்தி நிச்சயமாக நாடாளுமன்றத்தில் இருப்பார். அவருக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் மிக அருமையாக செயல்படக்கூடிய திருமதி பிரியங்கா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முழுத் தகுதி பெற்றவர் என்றாரவர்.
இதனை உணர்ந்து காங்கிரஸ் கட்சி பிரியங்காவிற்கான சிறப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதே தமது நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் 20 ஆண்டுகாலமாக பிரியங்கா மிகத் தீவிரமாக தேர்தல் தொண்டாற்றி இருக்கிறார். கட்சியை அவர் அங்கு நன்கு வளர்த்து இருக்கிறார்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாஜக உறுப்பினரிடம் தோற்று இருக்கிறார். ஆனால், 2004 முதல் ரே பரேலியில் சோனியா காந்தியைத் தோற்கடிக்க இயலவில்லை.