தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழங்குடியினரை வனப்பகுதியிலேயே அடக்கி வைக்க ஆளும் பாஜக முயற்சி: ராகுல் காந்தி

2 mins read
8a618e42-c16c-42ac-9bd6-9d2386dc0a30
ராகுல் காந்தி - படம்: இந்திய ஊடகம்

வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியை இழந்தார். இதனிடையே, அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, அவருடைய எம்.பி. பதவி தகுதியிழப்பு ரத்தானது.

மீண்டும் எம்.பி. பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக சனிக்கிழமை தனது வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பேசினார்.

“மத்தியில் ஆளும் பாஜக, பழங்குடியினத்தவர்களை ஆதிவாசி என அழைப்பதற்கு பதில் வனவாசி எனக் கூறி அவமதிக்கிறது. இதற்கு பின்னால் ஒரு சதி உள்ளது. அதாவது நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்ற அந்தஸ்தை அவர்களுக்கு வழங்க மறுக்கிறது. அவர்களை வனப்பகுதியிலேயே அடக்கி வைக்க பாஜக முயற்சிக்கிறது. இதன் மூலம் வனப்பகுதி நிலங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி தொழிலதிபர்களுக்கு வழங்குகிறது.

“பாஜகவின் இந்தச் சித்தாந்தம் ஏற்கக் கூடியது அல்ல. பழங்குடியினரை வனவாசி என அழைப்பது வரலாற்றையும் பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் திரிக்கும் முயற்சி ஆகும். இது நாட்டு மக்களுடனான அவர்களுடைய உறவின் மீதான தாக்குதல் ஆகும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பழங்குடியினர் ஆதிவாசிகள். நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அவர்கள்தான். எனவே, அவர்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

“மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பழங்குடியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றில் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

“இப்பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளும் மருத்துவர்களும் சிரமப்படுகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும். இதன் மூலம் மின்சாரத் தட்டுப்பாடு பிரச்சினை தீரும் என நம்புகிறேன்.

“இப்பகுதியில் வசிக்கும் பெண்களில் அதிகப்படியானோருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நடமாடும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மையத்தை நிறுவ வேண்டும். இதனால் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர முடியும்,” என்று திரு ராகுல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்