மும்பை: தனது சாலையோர காப்பிக் கடையை உலகளாவியக் கடையாக மாற்றும் கனவைக் கொண்டுள்ளார் ஓர் ஆடவர். அதைக் கொண்ட பதிவை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் பிரபலமடைந்த இவரின் கனவுக்குத் தாங்கள் ஆதரவளிக்கப்போவதாக பலர் கூறி வருகின்றனர். இவர் தங்களை ஊக்கப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
சாலையோரத்தில் காப்பிக் கடை வைத்து நடத்தும் இந்த ஆடவரை டுவிட்டர் பயனாளரான டி பிரசனாத் நாயர் அடையாளம் கண்டார். ஆடவர் மும்பை நகரில் இருக்கும் மாயாங்க் பாண்டே பகுதியில் தனது சாலையோர காப்பிக் கடையை நடத்துகிறார்.
சிறிதாக இருக்கும் தனது காப்பிக் கடையை உலகளாவிய கடையாக உருவெடுக்க வைக்கும் தனது கனவைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது கடைக்கு ‘தி காஃபி பார்’ என்ற பெயர் வைத்துள்ளார் ஆடவர்.
திங்கட்கிழமையன்று டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட இப்பதிவு ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவைக் கண்ட பலரும் பிரசனாத் நாயருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

