ஹனுமன்கார்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுநர், பெண் மீது மோதி காரின் முன்பகுதியில் அப்பெண் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான அதிர்ச்சியான கண்காணிப்புக் கேமரா பதிவு வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காணமுடிந்தது.
மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது. ஆனாலும் ஓட்டுநர் காரை நிறுத்தவில்லை. காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காரின் பதிவு எண் உள்ளிட்ட தகவல்களைக் கூடுதல் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத அந்த கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.