சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை மற்றும் நிலச்சரிவுகளில் மாண்டோர் எண்ணிக்கை 74க்கு அதிகரித்துள்ளது.
மழை காரணமாக ஏற்கெனவே இடிந்து விழுந்த சிவன் கோவில் இடிபாடுகளிலிருந்து வியாழக்கிழமை மேலும் ஒரு சடலத்தை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.
தலைநகர் சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் உள்ள அந்தக் கோவில் நிலச்சரிவால் இடிந்தது. அதே சம்மர் ஹில் பகுதியில் ரயில் தண்டவாளம் ஒன்று துண்டிக்கப்பட்டது. இது தவிர, சிம்லாவில் மேலும் மூன்று பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 21 பேர் உயிரிழந்தனர். மழையால் இமாச்சலப் பிரதேசம் கடந்த இரு மாதங்களாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த 55 நாள்களில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஜூன் 24ஆம் தேதி முதல் அங்கு நிகழ்ந்த மழை தொடர்பான துயரச்சம்பவங்களில் 217 பேர் மாண்டுவிட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரசாங்கம், சேதத்தின் அளவு ரூ.10,000 கோடி என மதிப்பிட்டுள்ளது.

