திருப்பதி: திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இரவில் தொடர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வனத்துறையினர் பொருத்தி இருக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் இது தெரியவந்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருப்பதி மலையில் உள்ள முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தைப் புலி ஒன்றின் நடமாட்டம் இருப்பது நடைபாதையில் அண்மையில் பொருத்தப்பட்டு இருக்கும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தைகளைப் பிடிப்பதற்காக மேலும் ஆறு கூண்டுகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
அதேபோல் திருப்பதி மலையில் உள்ள சிறப்பு தங்குவிடுதி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுதவிர பல்வேறு இடங்களில் முள்ளம்பன்றிகள், காட்டு பன்றிகள், புனுகு பூனைகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதும் இரவிலும் தானியங்கி முறையில் படம்பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகியுள்ளன.