அமராவதி: அமெரிக்காவிற்கு மேற்கல்வி படிக்கச் சென்ற 21 இந்திய மாணவ, மாணவிகள் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கல்லூரிகளில் இருந்து வரும் உரிய அழைப்பு, விசா போன்றவை கிடைத்த பின்னரே அந்த மாணவர்கள் அமெரிக்கா சென்றனர்.
இருப்பினும், அந்த 21 பேரும் லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா போன்ற விமான நிலையங்களில் குடிநுழைவுச் சோதனை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின் முடிவில் மாணவர்கள் கொண்டு வந்த, ஆவணங்கள் சரியில்லை எனத் தீர்மானித்து வியாழக்கிழமை அவரவர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பெரும்பாலானோர் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்க சட்டப்படி, ஒருவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகள்வரை மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாது.
ஆதலால், இந்தியா திரும்பி வந்துள்ள அந்த 21 மாணவர்களின் மேற்படிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறுஇந்திய வெளியுறவுத் துறை, அமெரிக்க தூதரகத்தைக் கேட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயில ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் செல்கின்றனர்.