இம்பால்: இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் எழுந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு நாகா மக்கள் அதிகம் வசிக்கும் குகிதேவாய் கிராமத்தில் 3 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
அதைக் கண்டித்தும், பழங்குடி சமூக மக்கள் வசித்து வரும் மலை மாவட்டங்களில் மீண்டும் அசாம் ரைபிள் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இந்த போராட்டத்தையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டம் கலவரமாக மாறக்கூடும் என்பதால் அங்கு கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

