புதுடெல்லி: உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்கவும், விநியோகத்தை மேம்படுத்தவும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 விழுக்காடு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
இந்த புதிய விதிமுறை டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் வெங்காயம் விலை உயரக் கூடும் என்று தகவல்கள் வெளியான நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த நான்கு மாதத்தில் மட்டும் இந்தியா கிட்டத்தட்ட 1 மில்லியன் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்துள்ளது. பங்ளாதேஷ், மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகியவற்றுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் அரசின் கையிருப்பில் இருந்து கிட்டத்தட்ட 0.3 டன் வெங்காயம் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அண்மையில் இந்தியாவில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200ஐ கடந்தது. தற்போது தக்காளி விலை குறைந்துவிட்ட நிலையில், வெங்காயம் விலை உயராமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.