புதுடில்லி: பாலியல் வன்கொடுமையால் குஜராத் பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த, 25 வயதாகும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், 26 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சில தினங்களுக்கு முன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கருக் கலைப்பு வழக்குகளில் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது, பொன்னான காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், உயர் நீதிமன்றம் மிகவும் மெத்தனமாக நடந்துள்ளது என குஜராத் உயர் நீதிமன்றத்தை கண்டித்து இருந்தது.
மருத்துவர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமையால் குஜராத் பெண்ணுக்கு உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை அனுமதி அளித்துள்ளது.
கருக்கலைப்பு செய்யும் அதே சமயம் குழந்தை உயிருடன் இருந்தால் அதை மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் வளர்க்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து உரிய சிகிச்சை வழிமுறைகளோடு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் குழுவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.