புதுடெல்லி: புதுடெல்லி விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் நேரத்தில் நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுவிட்டது.
அகமதாபாத் நகரில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் விமானமும் வேறு ஒரு விமானமும் வெறும் 1.8 கி.மீ. அருகருகே வந்ததால் இரண்டும் மோதிக்கொள்ளக்கூடிய ஆபத்து அதிகமானது.
அந்த இரண்டு விமானங்களிலும் மொத்தம் 300 பயணிகள் இருந்தனர்.
டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்குச் செல்லும் யுகே 725 விமானம் புதன்கிழமை காலை புறப்படத் தயாராக இருந்தது.
அதே நேரத்தில் அகமதாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த விஸ்தாரா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கி இருந்தது.
அந்த இரண்டு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் இருந்தன.
இதனிடையே, மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்குச் செல்லவிருந்த விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானம், அகமதாபாத்தில் இருந்து வந்து விமானம் தரையிறங்கி இருந்த அதே ஓடுபாதையில் இருந்துதான் புறப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் நிலவரத்தைப் புரிந்துகொண்ட அகமதாபாத் விமானியான சோனு கில், 45, உடனடியாக அது பற்றி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு புறப்பட்டுச் செல்லவிருந்த விமானத்தை நிறுத்திவிட்டனர். அப்போது இரண்டு விமானங்களும் வெறும் 1.8 கி.மீ. தொலைவில்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் விமானியான சோனு கில் குறித்த நேரத்தில் திறமையாகச் செயல்பட்டதால் 300 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும் இதற்காக அந்த விமானிக்கு நன்றி சொல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.