வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்ததன் மூலம் மகாராஷ்டிராவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த மோடி அரசாங்கம், சேதத்தை விரைவாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் இணைந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் வரலாற்றில் இதுவரை இல்லாத விலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410 என்ற விலையில் வாங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் அன்று ஏற்றுமதி வரி விதிப்பு, கூடுதல் கொள்முதல் செய்தல் ஆகிய இரண்டு முடிவுகளும் ஒரே நாளில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“விவசாயிகள், நுகர்வோர் இரு தரப்பினரும் விலைமதிப்பற்றவர்கள்,” என்ற திரு கோயல், கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்றார்.
தக்காளி விலை ஏற்றத்தை தொடர்ந்து வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 30-35 ரூபாயில் இருந்து 45-60 ரூபாயாக உயர்ந்ததை அடுத்து, மத்திய அரசு ஏற்றுமதி வரியை விதித்தது.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்துரைத்த அவர், மாநில அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாகச் சொன்னார்.
மகாராஷ்டிராவில் இப்போது கிட்டத்தட்ட 20 கொள்முதல் மையங்களும், மத்தியப் பிரதேசத்தில் நரசிங்பூருக்கு அருகிலுள்ள ஷாபூரில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன.
உலகில் வெங்காயம் அதிகம் பயிரிடும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. விளைபொருளில் 42% மகாராஷ்டிராவில் உள்ளது.
வெங்காயம் உற்பத்தி செய்யும் மற்ற மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், பீகார், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலுங்கானா ஆகும்.
மத்திய அரசின் வரி விதிப்புக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவைத் தாக்கி வருகின்றனர்.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே, “பாஜக எப்போதும் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கவனிப்பது இல்லை. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அளவுகோல். பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ஏற்றுமதி வரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பா.ஜ.க அரசின் ஏற்றுமதி வரி முடிவை விமர்சித்தவர்களில், அதன் கூட்டணி அமைப்பான ராயத் கிராந்தி சங்கதானாவும் ஒன்று. முன்னாள் அமைச்சர் சதாபாவ் கோட் தலைமையிலான விவசாய அமைப்பாகும். இந்த முடிவை அரசாங்கம் இரண்டு நாட்களில் திரும்பப் பெறாவிட்டால் மும்பைக்கு டிராக்டர் பேரணி நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.