புதுடெல்லி: சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. அதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு ஒரு ‘மகத்தான சாதனை’ என்று அவர் பாராட்டியுள்ளார்.
இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில்,”நேற்று மாலையில் இஸ்ரோ நிகழ்த்திய மகத்தான சாதனையின்போது நான் எவ்வளவு பரவசத்துடன் இருந்தேன் என்பதை தெரிவிக்கவே இந்தக் கடிதம்.
இந்தியாவின் இந்தச் சாதனை அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு உற்சாகமும் பெருமையும் அளிக்கும். பல ஆண்டுகளாக சிறப்பான திறன்களால் இஸ்ரோ கட்டமைக்கப்பட்டுள்ளது.
அது குறிப்பிடத்தக்க தலைவர்களைக் கொண்டிருக்கிறது, கூட்டுமுயற்சியின் உந்துசக்தி அதனை இயக்குகிறது. அறுபதுகளின் முற்பகுதியில் இருந்து ஒன்றிணைக்கப்பட்ட தன்னம்பிக்கை அதன் பெரும் வெற்றிக்குப் பங்களிப்பு செய்துள்ளது.
இந்த நேரத்தில் இஸ்ரோவில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இந்தச் சிறப்பான தருணத்துக்காக பங்களிப்பு செய்த ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.