திருப்பதி: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், மதின குடா என்னும் இடத்தில் கினாரா கிராண்ட் விடுதி உள்ளது. இதில் தேவேந்தர் கயான் என்பவர் பொது மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் புதன்கிழமை இரவு மியா போரில் உள்ள பஸாரில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் தேவேந்தர் கயானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க தேவேந்திர் கயான் பஸாரில் அங்கும் இங்குமாக ஓடினார். இருப்பினும் துப்பாக்கிக்காரர்கள் விடாமல் துரத்திச் சென்று கயானை சுட்டனர். இதில் தேவேந்தர் கயான் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனால் பஸார் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது.
அங்கிருந்த சிலர் தேவேந்தர் கயான் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். அப்போது அப்பகுதியில் இருந்து 6 துப்பாக்கிக் குண்டுகளை கைப்பற்றினர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.