லடாக்: இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எவரும் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பொய் என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினமான ராகுல் காந்தி லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கார்கில் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்வதாகவும் கடுமையாக சாடினார்.
“நம் நாட்டின் நிலத்தை சீனா கைப்பற்றியது லடாக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி உண்மையைச் சொல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.
“அவர் லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி அதானி குழுமத்திற்கு கொடுக்கிறார். அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். லடாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சனைகள் உள்ளன. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உங்கள் முக்கியப் பிரச்னைகளை அவையில் பேசுவேன்,” என்று ராகுல் கூறியுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன அதிபரும் இந்திய பிரதமரும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன எல்லையில் வாழும் மக்கள் பலரை சந்தித்துப் பேசினேன். அங்கு வாழும் மக்களிடம் விசாரித்தால் கிராசிங் என்ற பகுதியில் நாம் அனைவரும் பயன்படுத்தி வந்தோம். இப்போது அங்கு செல்ல முடியாது என சொல்கின்றனர்.
“பா.ஜ.க,வும், ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. ஆனால் காங்கிரஸ் அமைதியையும், மனிதநேயத்தையும் நாடு முழுவதும் பரப்புகிறோம். பா.ஜ.க.வின் வன்முறை அரசியலுக்கு எதிராக நிற்கிறோம் என்பதை காட்டவே பாரத் ஜூடோ யாத்திரையை ஒற்றுமைக்கான அடையாளமாக நடத்தினோம்.
“பனிக்காலம் என்பதால் யாத்திரையின்போது இங்கு வரமுடியவில்லை. இதனால் நான் தற்போது லடாக் மக்களை பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தேன். லடாக் மக்கள் உரிமைக்கு எப்போதும் துணைநிற்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.
“லடாக் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் சொன்னது வருத்தமளிக்கிறது,” என்று ராகுல் கூறினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து செல்லாத மேலும் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ஆகஸ்ட் 17ஆம் தேதி லடாக் சென்றடைந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி முதல் முறையாக அங்கு சென்றிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இதனைத் தொடர்ந்து இரண்டு நாள் சொந்தப் பயணமாக ராகுல் காந்தி ஸ்ரீநகர் செல்கிறார்.
“அங்கு அவருடன் சோனியா காந்தியும் இணைந்து கொள்கிறார். அப்போது அவர்கள் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போவதில்லை. எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்கப் போவதில்லை” என்று ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகர் ரசூல் வானி தெரிவித்துள்ளார்.

