திருப்பதி: ஆந்திரா மாநிலம், பூஜாரி வண்டல பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீதர், 36, என்ற முன்னாள் ராணுவ வீரர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்து விட்டு கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்து தன் மனைவி மம்தாவுடன், 34, வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே, மம்தாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஸ்ரீதரிடம் அவரது தாயை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மம்தா வற்புறுத்தினார். இதற்கு ஸ்ரீதர் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஸ்ரீதர் மனைவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் ஸ்ரீதர் தன்னுடைய அறையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் ஸ்ரீதர் அறைக்குச் சென்ற மம்தா அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க அறையின் கதவைப் பூட்டிவிட்டு தப்பி ஓடீவிட்டார்.
ஸ்ரீதரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலியால் அவர் அலறி துடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவைத் திறந்து ஸ்ரீதர் மீது தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஸ்ரீதரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மம்தாவைத் தேடி வருகின்றனர். இதனிடையே, மகனை இழந்த தாயார் அழுது புலம்பிவருவதாக தகவல்கள் தெரிவித்தன.

