சத்தீஸ்கர்: சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறன் கொண்டவர்களும் 80 வயதைத் தாண்டியவர்களும் இனி வீட்டில் இருந்தவாறு அஞ்சல் வாக்குகள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கு வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
சத்தீஸ்கரில் மொத்தம் 1.97 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 98.5 லட்சம் பெண்கள், 98.2 லட்சம் ஆண்கள், 762 மூன்றாம் பாலினத்தவா்கள் உள்ளனா். மாநிலத்தில் மொத்தம் 24,109 வாக்குச்சாவடிகள் உள்ளன.
சட்டவிரோதமாக மது, பணம், பொருள்கள் மற்றும் போதைப்பொருள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க, மாநிலங்களுக்கு இடையிலான 105 எல்லை சோதனைச் சாவடிகளில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிா்வாக, சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.