சென்னை: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டரும் உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தா புதன்கிழமை தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“இங்கு பலர் வந்திருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உற்சாகமாக உணர்கிறேன். இது சதுரங்கத்திற்கு நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவை அவரது பள்ளித்தோழர்கள், அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மாநில அரசுப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் பெற்று திரும்பியபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றிருந்தோம். பிரக்கியும் (பிரக்ஞானந்தா) அனைத்து மக்களிடமிருந்தும் அதே அன்பை இப்போது பெறுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பிரக்ஞானந்தா வீடு திரும்பியது குறித்து அவரது சகோதரி கூறினார்.
ஃபிடே உலகக் கிண்ண சதுரங்கத் தொடர் அஸர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடந்தது. அதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார். அவர் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.