சென்னை: அனல்மின் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியை எடுப்பதற்காகக் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இது நடந்தால், கிராமங்களின் சுற்றுச்சூழலும் விவசாயமும் பாதிக்கப்படும் என்று அம்மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் என்எல்சி நிறுவனத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டோர் நலச் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக நிலங்களின் உரிமையாளர்களுக்கு உறுதியளித்தபடி போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. நிலம் வழங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை.
“நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு எந்தத் திட்டத்தையும் வகுக்கவில்லை. சட்ட விதிகளின்படி, இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தனர்.
“தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, என்எல்சி தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே,இ என்எல்சி நிறுவனத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும்,” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு குறித்த விசாரணை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.