புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 70க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வருகை தரவுள்ளனர்.
அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் உள்ளிட்ட பல பிரபலங்களின் விமானங்களை வரவேற்பதற்கு ஏதுவாக டெல்லி விமான நிலையம் தயார்ப்படுத்தப்படுகிறது.
பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்களின் விமானங்கள் டெல்லிக்கு வரவுள்ளதால் அதை வரவேற்கவும், நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாற்று ஏற்பாடுகளாக பாலம் விமானநிலையம் மட்டுமல்லாமல் லக்னோ, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ் ஆகிய நான்கு விமான நிலையங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாலம் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களை வரவேற்கும் பணிகளை பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே. மிஸ்ரா, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜி20 உச்சி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜி20 மாநாடு நடைபெறும்போது பாலம் விமான நிலையம், மாநாடு நடைபெறும் மாநாட்டு மண்டபங்கள் ஆகியவை அதிக கண்காணிப்பில் வைக்கப்படும். மேலும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை முழு கண்காணிப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாலம் விமான நிலையத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அருகில் உள்ள லக்னோ உள்ளிட்ட நான்கு விமான நிலையங்களுக்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்படும். அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் உள்ளிட்ட விமானங்களை நிறுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் புதுடெல்லி முழுதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டுப் பிரதிநிதிகள் செல்லும் வழிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி20 மாநாடு முடியும் வரை டெல்லி நகரில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்று கூறப்படுகிறது.