சூரத்: குஜராத் மாநிலத்தின் வர்த்தக நகரமான சூரத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சூரத் காவல்துறை புகார் கிடைத்த 3 மணி நேரத்தில் அந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை, அதிரடி வேட்டையின் மூலம் துரத்திப் பிடித்து வைரங்களை மீட்டது.
வைரங்களுக்குப் புகழ்பெற்ற நகரம் குஜராத்தின் சூரத். இங்குள்ள சர்தானா பகுதியில் கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இரண்டு பேர் 2 பைகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கொண்டு சென்றனர்.
அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த ஊழியர்களை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது. அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளையும் துப்பாக்கி முனையில் பறித்துக்கொண்டு கும்பல் தப்பியது. அந்த பைகளில் ரூ.5.53 கோடி மதிப்புள்ள வைரம் இருந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரத் காவல்துறை உடனடியாக மற்ற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நவ்சாரி - வல்சாத் நெடுஞ்சாலையில் வல்சாத் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது வைரங்களை கொள்ளை அடித்து தப்பிய கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்த வைரங்களும் மீட்கப்பட்டன. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையர்கள் சிக்கிய பகுதி சூரத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.