ஐதராபாத்: சிறுவனின் வயிற்றில் காந்த உருண்டைகள் இருந்ததால் உடனடியாக அவனது பெற்றோர் விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவனுக்கு ‘சி.ஆர்ம் எக்ஸ்ரே’ என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி துர்கா தம்பதியின் மகன் நெகன் ஆர்யாவுக்கு ஏழு வயதாகிறது. சில நாட்களுக்கு முன்பு கடும் வயிற்று வலியும் வாந்தியும் சிறுவனுக்கு ஏற்பட்டது.
அவனது பெற்றோர் உடனடியாக விஜயவாடாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் நெகனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது உருண்டை வடிவிலான பல பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பெற்றோரிடம் விசாரித்த போது, சிறிய காந்த உருண்டைகள் கொண்ட பொம்மைகளை வைத்து அவன் விளையாடுவது வழக்கம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, சி.ஆர்ம் எக்ஸ்ரே என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீன அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுகுடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐம்பது காந்த உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் சில மணிநேரம் சிறுவன் ஐசியு வார்டில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டான்.
தற்போது சிறுவன் நெகன் ஆர்யா, முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

