சந்திரபாபு நாயுடுக்கு 14 நாள் காவல்; ஆந்திராவில் முழு வேலைநிறுத்தம், பள்ளிகள் மூடல்

2 mins read
bd977b62-9784-42cb-a996-cbe4e7cc12db
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் வேளையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அமராவதி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு 2014-19 ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 3,000 கோடி செலவாகும் என தீர்மானிக்கப்பட்டு, அதில் ஆந்திர அரசு 10 விழுக்காடு நிதி வழங்கியது.

பத்து விழுக்காடும், ஜிஎஸ்டி ரூ. 40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது.

இதில் ரூ. 118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசாங்கம் குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக சிஐடி காவல்துறை 2021ஆம் ஆண்டே வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ஜெகன் அரசு துரிதப்படுத்தியிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணிக்கு, கர்னூல் அருகே உள்ள நந்தியாலம் ஆர்.கே திருமண மண்டபத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறை அதிரடியாகக் கைது செய்தது.

இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு கைது காரணமாக அவரது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முழு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

முழு வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆந்திராவில் திங்கட்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடியிருப்பதாக ஆந்திராவிலிருந்து வெளியாகும் தகல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே, சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பவன் கல்யாணும் அவரது ஆதரவாளர்களும் என்.டி.ஆர். மாவட்டத்தில் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடிகையும் அமைச்சருமான ரோஜா, சந்திரபாபுவின் கைது நடவடிக்கையால் உற்சாகமடைந்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக, நகரியில் அமைச்சர் ரோஜா, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்