மும்பை: திருடிய டிராக்டர் சக்கரத்தில் திருடன் சிக்கிய விவகாரம் வியப்பை ஏற்படுத்தியது.
குஜராத்தில் மொடோசா என்ற பகுதியில் டிராக்டர் விற்பனைக் கூடம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு விற்பனைக்காக பல டிராக்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. அவை பிரத்தியேகப் படச்சாதனத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தன.
அந்தக் கூடத்திற்குள் நுழைந்த திருடன் ஒருவன் ஒரு டிராக்டரைத் திருட திட்டமிட்டு அதன் பின் சக்கரத்தின் அருகில் நின்றுகொண்டு டிராக்டரை கிளப்பினான்.
ஆனால் எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்னோக்கி நகர்ந்ததால் திருடனின் கால் மீது அதன் சக்கரம் ஏறியது. இதனால் சக்கரத்தில் சிக்கிய திருடன் கீழே விழவே அவன் மீது டிராக்டர் ஏறிவிட்டது. ஆனாலும் திருடனுக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இடுப்பை மட்டும் தேய்த்துக் கொண்டு, ஓடிச் சென்று டிராக்டர் மீது தாவி அமர்ந்து அதனைத் திருடிச் சென்றுவிட்டான்.
மறுநாள் டிராக்டர் நிறுவன ஊழியர்கள் அங்கு வந்தபோதுதான் திருட்டு பற்றி தெரியவந்தது. இதைத்தொடர்ந்து படச் சாதனத்தின் உதவியுடன் அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

