புதுடெல்லி: இந்திய தலைநகர் புதுடெல்லியில் இம்மாதம் 9, 10ஆம் தேதிகளில் ஜி20 உச்சநிலை மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
அதில் சீன அதிபர் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அந்த நாட்டு பிரதமர் கலந்துகொண்டார். அவருடன் சீனாவைச் சேர்ந்த ஒரு குழுவினரும் வந்திருந்தனர்.
அவர்கள் புதுடெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டல் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தனர். அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரிடம் வழக்கத்திற்கு மாறான வடிவில் இரண்டு பைகள் இருந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.
அரசதந்திர வழமையையொட்டி அந்தப் பைகளை முன்னதாக பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதித்து இருந்தார்கள். பிறகு அந்தச் சீனக் குழுவினர் தங்கி இருந்த ஓர் அறையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் இரண்டு பைகளுக்குள் சந்தேகத்திற்கு இடமான ஒரு சாதனத்தைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அது பற்றி அவர் பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். அந்தத் துறையினர் அந்தப் பைகளை இயந்திரங்களில் விட்டு படம் எடுத்து பரிசோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், சீனக் குழுவினர் மறுத்துவிட்டனர். அதையடுத்து பிரச்சினை மூண்டது. கடைசியில் அந்தப் பைகளை புதுடெல்லியில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்க அந்தக் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.
ஹோட்டலில் 12 மணி நேரமாக இந்தப் பிரச்சினை நீடித்தது. அப்போது அந்த ஹோட்டல் அறைக்கு வெளியே காவல்துறையினர் காவல் காத்தபடியே இருந்தனர் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்ளவில்லை என்றாலும் ஜி20 அமைப்பின் பணிகளை எப்போதுமே தான் ஆதரித்து வந்திருப்பதாக சீனா தெரிவித்து உள்ளது.