புதுடெல்லி: போலியான புற்றுநோய்த் தடுப்பு, கல்லீரல் சிகிச்சை மருந்துகள் விற்பனையாகும் விவகாரத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.
தானாக முன்வந்து இப்பிரச்சினையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு நிறுவனத்துக்கு (சிடிஎஸ்சிஓ) அது கடிதம் அனுப்பி அறிவுறுத்தி உள்ளது.
லண்டன், அயர்லாந்து நாடுகளில் பெட்டிகளில் அடைக்கப்பட்ட புற்றுநோய், கல்லீரல் பாதிப்புக்கான போலி மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசின் டிசிஜிஐ நிறுவனம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புற்றுநோய் தடுப்புக்கான அட்செட்ரிஸ் (Adcetris) என்னும் ஊசி மருந்து, மற்றும் கல்லீரல் பாதிப்பை தடுக்கும் டிஃபிடெலியோ (Defitelio) ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இம்மருந்துகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனையாவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதைக் குறிப்பிட்டு மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாடு தலைமை (டிசிஜிஐ) நிறுவனம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
அதில், புற்றுநோய் தடுப்பு, கல்லீரல் பாதிப்பு தடுப்புக்கான இந்த இரண்டு குறிப்பிட்ட மருந்துகளின் பெட்டிகளில் தோராயமாக ஒன்றை எடுத்து பரிசோதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மருத்துவர்களும், சுகாதார ஆய்வாளர்களும் இக்குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த யோசனை கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இரண்டு மருந்துகள் மீதான சோதனை ஆங்காங்கே நடைபெற தொடங்கி உள்ளன.
அந்த மருந்துகளை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் தான் போலி மருந்துகள் விற்பனையாவதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊசி மருந்துகள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், புற்றுநோய் தடுப்பு, கல்லீரல் பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகள் போலியாக விற்பனை செய்யும் விவகாரத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.
தானாக முன்வந்து இப்பிரச்சினையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி அறிவுறுத்தி உள்ளது.


