லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவைப்போல் மேலும் ஒரு புதிய தொழில் நகரம் உருவாகிறது.
இது, புந்தெல்கண்ட் தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாக ‘பிடா’ (பிஐடிஏ) என்று அழைக்கப்படுகிறது.
ஜான்சி-குவாலியர் நெடுஞ்சாலையில் ‘பிடா’வை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஜான்சியிலுள்ள சாலைகள், அந்நகரைச் சுற்றியுள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே, இந்த நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய தொழில் நகரத்தை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஏறத்தாழ 14,000 ஹெக்டரில் அமைக்கப்பட உள்ள பிடாவின் முதல்கட்டப் பணிகளுக்காக மாநில அரசு ரூ.5,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக அப்பகுதியின் 33 கிராமங்கள் கையகப்படுத்தப்படும். இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான இளையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.


