புதுடெல்லி: இந்தியாவில் கோதுமையை சிலர் தேவைக்கு அதிகமாக இருப்பு வைத்துக்கொண்டு, நாட்டில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலைவாசியை உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கோதுமையின் அண்மைய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெரும் வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள் போன்றோருக்கான இருப்பு வரம்பு 2,000 டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அரசாங்கம் அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
இருப்பினும், உணவு பதப்படுத்துவோர், சிறிய சில்லறை விற்பனையாளர்களுக்கான இருப்பு வரம்புகளில் மாற்றம் இல்லை.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கோதுமை விலை சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தற்போது, சில்லறை விற்பனையில் கோதுமை விலை சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.30 என்ற அளவில் நிலையாக உள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி, அரசுக் கிடங்குகளில் 202 லட்சம் டன் கோதுமை இருக்க வேண்டும் என்ற நிலையில், 255 லட்சம் டன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

