லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள ஒரு வீட்டின் கான்கிரீட் கூரை சனிக்கிழமை காலை நேரத்தில் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
அந்த வீட்டில் சதிஷ் சந்திரா என்பவரும் அவரின் குடும்பத்தாரும் வசித்து வந்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பகுதியில் இருந்த துப்புரவுப் பணியாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகளும் பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
திரு சதிஷ் சந்திரா, 40, அவரின் மனைவி சரோஜினி தேவி, 35, ஹர்ஷித், 13, ஹர்ஷிதா, 10, அன்ஷ், 5, ஆகிய அத்தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் மாண்டுவிட்டனர்.
அவர்களின் உடல்களை மீட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.