புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இரு தரப்பினரும் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை தலைமைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணை நடக்கவிருக்கும் நாளில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் ஆகிய இரண்டு தரப்பினரிடமும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இரண்டு தரப்பினரிடம் இருந்தும் அளிக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்குச் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
இதுகுறித்து கருத்துக் கூறிய சரத் பவார், “எங்களுடைய கட்சியே தேசியவாத காங்கிரஸ் கட்சி. அதற்கு எங்களிடம் தக்க ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஆணையத்திடம் சமர்ப்பிப்போம்,” என்று கூறியுள்ளார்.
அதேபோல் அஜித் பவார், “எங்களிடம் உள்ள ஆதாரங்களையும் வாதங்களையும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் வைப்போம்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.