திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குறிப்பாக பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக திருப்பதி மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் புதிய மேம்பாலத்தைக் கட்ட முடிவு செய்தது.
இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது ரூ.650 கோடி செலவில் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மாலை திறந்து வைத்தார்.
இன்று முதல் புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலை அடிவாரம் வரை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா, தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்தப் மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர் என்றார்.
“திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்,” எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.