திருவனந்தபுரம்: ரூ.34,000க்கு காவல் நிலையத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடும் கட்டணப் பட்டியலை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காவல் நிலையத்துடன் காவல்துறை ஆய்வாளர், மோப்பநாய், கம்பியில்லாக் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வசதிக்கான கட்டணப் பட்டியலையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு காவல் நிலையத்திற்கு ரூ.12,000, கம்பியில்லாக் கருவிகளுக்கு ரூ.12,130, மோப்ப நாய்க்கு ரூ.7,280, காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.3,035 முதல் ரூ.3,340 வரை எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை ஆய்வாளருக்குப் பதிலாக சிவில் காவல் அதிகாரிக்கான கட்டணம் ரூ.610 ஆகும். காவல்துறை வெளியிட்டுள்ள இந்தப் பட்டிலின்படி, காவல்துறை ஆய்வாளரைவிட மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
காவல்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்களில் பலரும் அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் இது என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.