பெங்களூரு: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 உந்துகணை மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் தேதி ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.
பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1’ என்ற இடத்தை சென்றடையும்.
அங்கிருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.
இதற்கு முன்னதாக ஆதித்யா-எல் 1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும்போது ஐந்து முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3ஆம் தேதி நடந்தது. அடுத்து 2ஆம் கட்டமாக கடந்த 4ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
3வது கட்டமாக சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10ஆம் தேதியும் 4வது முறையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி 15ஆம் தேதியும் வெற்றிகரமாக நடந்தது.
இந்த நிலையில் ஆதித்யா-எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆதித்யா எல்-1 விண்கலம் அளவிட தொடங்கியுள்ளது
பூமியில் இருந்து 50,000 கிலோ மீட்டர் தொலைவில் ‘STEPS’ என்ற கருவி செயல்படத் தொடங்கியது என்றும் STEPS கருவியின் உணர்வுக்கருவிகள் அதிவெப்பம் மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்தது.