அரோரா வடிவமைத்த மிதக்கும் கட்டடம். - படம்: இந்திய ஊடகம்
மும்பை: செயற்கை நுண்ணறிவு இன்று மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
கலைஞர்களின் கற்பனைக்கும் இது புதிய சிறகுகளைத் தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
இத்தகைய வித்தியாசமான கலைப்படைப்புகள் சில இணையத்தில் பலரையும் ஈர்த்து வருகின்றன.
இந்த வகையில், மும்பையில் எதிர்காலத்தில் காற்றில் மிதக்கும் கட்டடங்கள் எப்படி இருக்கும் என்று வடிவமைத்துக் காட்டியுள்ளார் மின்னிலக்கக் கலைஞர் பிரதீக் அரோரா.
தனித்துவமிக்க வடிவமைப்பில் இந்த நவீன கட்டடங்கள் மும்பை வான்வெளியில் மிதப்பதுபோல சித்திரிக்கப்பட்டுள்ளன.
‘மும்பை சர்ரியல் எஸ்டேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கலைப்படைப்பை ‘மிட்ஜர்னி’ செயற்கை நுண்ணறிவுச் சேவையைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளார் அரோரா.

