திருப்பூர்: திருப்பூர்வாசிகளான நான்கு பேர் திடீரென ரூபாய் 25 கோடிக்கு அதிபரானார்கள்.
கேரளாவில் வாரத்தில் ஏழு நாள்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடக்கிறது.
ஓணம் பண்டியையையொட்டி முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 85 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டன. 75 லட்சம் சீட்டுகள் விற்பனையாயின.
முதல் பரிசு ரூ.25 கோடி, இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ஒரு கோடி, மூன்றாவது பரிசு 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் 535,000 பரிசுகள் வழங்கப்பட்டன.
மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு லாட்டரி சீட்டு ரூ.500க்கு விற்கப்பட்டது.
சீட்டுக் குலுக்கல் முடிவு புதன்கிழமை இரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டது. TE 230662 என்ற சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது.
அந்தச் சீட்டு பாலக்காடு வாளையாரில் விற்கப்பட்டது. அந்தச் சீட்டை வாங்கியர் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உள்ளிட்ட நான்கு பேர் ஒன்றாகச் சேர்ந்த அந்தச் சீட்டை வாங்கியதாகவும் அவர்கள் அந்தச் சீட்டை திருவனந்தபுரம் சென்று லாட்டரி அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவின் பாலக்காடு நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கள் நண்பரைச் சந்தித்துவிட்டு அந்த நால்வரும் திருப்பூர் திரும்பிய வழியில் வாளையாரில் ரூ.1,500 கொடுத்து மூன்று சீட்டுகளை வாங்கினார்கள்.
அதில் ஒரு சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது.
ஓணம் வடிவில் வந்து அதிர்ஷ்ட தேவதை தங்களை அரவணைத்துக் கொண்டதை அறிந்து அந்த நால்வரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.