சீக்கிய பிரிவினைவாதியின் சொத்துகளை இந்தியா கைப்பற்றியது

சீக்கிய பிரிவினைவாதியின் சொத்துகளை இந்தியா கைப்பற்றியது

2 mins read
c8b3c63b-6d43-4133-bf54-0e8d51790600
கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எதிரே சுதந்திர காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் அணுக்கக் கூட்டாளியும் பிரபல சீக்கிய பிரிவினைவாதியுமான குர்பாத்வாத் சிங் பன்னுன் என்பவரின் சொத்துகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பு பறிமுதல் செய்து இருக்கிறது.

குர்பாத்வாத் சிங் பன்னுன் ஒரு வழக்கறிஞர். அவர் கனடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவரை பயங்கரவாதி என்று 2020ல் இந்தியா அறிவித்தது.

பயங்கரவாதம், கீழறுப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தேடப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் குர்பாத்வாத் சிங் பன்னுன்தான்.

அந்த அமைப்பின் கனடா கிளைக்கு, கொலையுண்ட நிஜ்ஜார் தலைமை வகித்தார்.

நிஜ்ஜார் கனடாவின் வான்கூவர் நகர் அருகே ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை இந்தியா தடை செய்து இருக்கிறது.

அந்த அமைப்பு காலிஸ்தான் என்ற சுதந்திர சீக்கிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகிறது.

நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என்று நம்புவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெரும் பிரச்சினை கிளம்பி இருக்கிறது.

கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தூதரக அதிகாரிகளை இரண்டு நாடும் வெளியேற்றி இருக்கின்றன.

கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் திடீரென தலையிட்ட குர்பாத்வாத் சிங் பன்னுன், காணொளி மூலம் ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

கனடாவில் வசிக்கக்கூடிய இந்துக்கள் இந்தியாவுடன் சேர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் காணொளியில் தெரிவித்தார்.

இந்திய செய்தி ஒளிவழி ஒன்றுக்குப் பேட்டி அளித்த குர்பாத்வாத் சிங் பன்னுன், கனடாவில் கொலை செய்யப்பட்ட நிஜ்ஜாரை 20 ஆண்டு காலமாக தனக்குத் தெரியும் என்றும் அவர் தன்னுடைய தம்பி போன்றவர் என்றும் கூறினார்.

நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்றார் அவர்.

அந்தப் பேட்டி வெளியான உடனேயே இந்திய அரசாங்கம் செய்திக் கட்டமைப்புகளுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

கொடூரமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோருக்கு இடம்தர வேண்டாம் என்று செய்தி கட்டமைப்புகளை இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

இதனிடையே, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவை அமைப்பு நீதிமன்ற உத்தரவுகளுடன் சனிக்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகாரில் இருக்கும் குர்பாத்வாத் சிங் பன்னுன் வீட்டை பறிமுதல் செய்துவிட்டது.

அமிர்தசரஸ் நகரில் குர்பாத்வாத் சிங் பன்னுனுக்குச் சொந்தமான வேளாண்மை நிலத்தையும் அந்த முகவை பறிமுதல் செய்து இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்