பாட்னா: பீகாரில் ஜஜத - ஆர்ஜேடி கூட்டணியில் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. மோசின்பூர் என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங்கியிருந்தார்.
அந்தத் தொழிலாளியின் மனைவியிடம், “உன் கணவன் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். பணத்தைக் கொடுத்துவிட்டு அவனை மீட்டுச் செல்,” என்று பிரமோத் கூறியுள்ளார்.
அதையடுத்து, அந்தத் தொழிலாளியின் மனைவி, தன் கணவரை மீட்பதற்காக கடந்த 23ஆம் தேதி பிரமோத் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது கணவர் இல்லை.
அங்கிருந்த பிரமோத்தும் அவரது நண்பர்களும் தொழிலாளியின் மனைவியிடம், கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, பிரம்பால் அடித்து உதைத்து சித்ரவதை செய்து தகாத முறையில் நடந்துகொண்டனர். பிரமோத்தின் மகன் அன்சூ குமார், அந்தப் பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் ஆடையில்லாமலேயே அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்றார். தனக்கு நேர்ந்த கொடுமையை கணவர், உறவினர்களிடம் அவர் கண்ணீர் மல்க கூறினார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை பிரமோத் என்பவர் மீதும் அவருடைய மகன்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்தத் தொழிலாளியின் மனைவி, “நாங்கள் வாங்கிய கடனையும் அதற்கான வட்டிப் பணத்தையும் பிரமோத்திடம் ஏற்கெனவே அடைத்துவிட்டோம். இருந்தும் அவர் மேலும் பணம் கேட்டு எங்களை மிரட்டி வருகிறார் என்று தனது புகாரில் கூறியுள்ளார்.