ஹாசன்: கர்நாடக மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை 75ல் ஞாயிற்றுக்கிழமை இரவு தறிகெட்டு ஓடிய கார் ஒன்று, மேம்பாலத்தில் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து மேம்பாலச் சுவரில் தொங்கியது. 20 அடி உயரத்தில் மேம்பால தடுப்புச்சுவரில் அந்தரத்தில் சிக்கியபடி கிடந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா வட்டத்தைச் சேர்ந்த ஷெட்டிஹள்ளி என்னும் சிற்றூருக்கு அருகே நடந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், வாகனத்தில் உயிருக்குப் போராடிய மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திங்கட்கிழமை நடந்த இன்னொரு விபத்தில், மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சாலைத்தடுப்பில் மோதி எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.